Saturday, 21 December 2013

இது மார்கழி மாதம்..

வணக்கம்.  நான்தான் சிக்கூ. என் தோழி கௌரி என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தியாச்சு.  அவங்க கேள்விப்பட்டது, படிக்கறது, சிந்திக்கறது, எல்லாத்தையும் எனக்கு சொல்லுவாங்க.  அதுலே சிலதை நான் உங்களுக்கு சொல்லுவேன்.  சரி, அவங்களுக்கு நான் 'சிக்கூ', எனக்கு அவங்க 'குக்கூ'. பேர் வைக்க எனக்கும் தெரியும் இல்லே? சிக்கூ-குக்கூ, எப்படி இருக்கு?

இது மார்கழி மாசம்.  "மாதங்களில் நான் மார்கழி" ன்னு அந்த பெருமாளே சொன்னாராம்.  ஏன், நம்ம கண்ணதாசன் கூட கதா நாயகியை 'மாதங்களில் அவள் மார்கழி' ன்னு வர்ணிச்சாரே! அதாங்க, 'காலங்களில் அவள் வசந்தம்' பாட்டுலே..

மார்கழிலே என்ன விசேஷம்?  இது கடவுள் வழிபாட்டுக்கான மாசம். ஒரு பக்கம் மார்கழி உற்சவம், உஞ்சவிருத்தி, திருப்பாவை, திருவெம்பாவை, ஐயப்பன் வழிபாடு, சபரிமலை யாத்திரை, கோயில்களெல்லாம் களை கட்டிடும்.  அதிகாலையிலே கோயிலுக்குப் போய் வழிபட்டா, புண்ணியம் மட்டுமில்லே, சுடச் சுட பிரசாதம்.  ஆஹா! அதோட ருசியே தனி.  பகவான் ஏசு பிறந்ததும் இந்த மார்கழி மாசத்துலேதான்.  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட கொண்டாட்டம், அதை ஒட்டி கடைகளிலே 'ஜே ஜே' ன்னு கூட்டம், வியாபாரம், தள்ளுபடி விற்பனை, இப்படி நிறைய சுவையான விஷயங்கள்..

மார்கழிலே பக்தி மட்டுமில்லே, பாட்டு, நடனம், நாடகம், இலக்கிய, இசைப் பேருரைகள், போட்டிகள்னு நம்ம ஊரே அமர்க்களப்படும்.  சபாக்களிலே ஜில் ஜிலுன்னு அலங்காரம் செஞ்சுகிட்டு, நிறைய பேர் பாடுவாங்க, ஆடுவாங்க. அதைப் பார்க்கப் போறவங்களும், விதம், விதமா அலங்காரம் பண்ணிகிட்டு, சரக், சரக்குன்னு நடந்து போவாங்க.

பீரோலே தொடாம வைச்சிருக்கற புது ஆடைக்கெல்லாம் கொண்டாட்டம், எல்லாம் வெளியிலே கிளம்பிடும்.  இதுக்கு ஒரு முக்கியமான காரணம், இந்த மார்கழியிலே ரொம்ப மழையோ, வெய்யிலோ இல்லாம, நம்ம ஊர் சீதோஷ்ணம் சூப்பரா இருக்கும்.  'வசந்தோத்ஸவம்' னு சொல்லுவாங்களே, நம்ம ஊரைப் பார்த்தா அப்படித்தான் இருக்கும்.  சரி, வெளியிலே அலைஞ்சா பசிக்காதா?  அதுக்கும் அங்கங்கே கேன்டீன்,  உணவு விடுதின்னு எல்லாம் கூட வந்து சேர்ந்துடும்.  அப்புறம் என்ன? செவிக்கும், கண்ணுக்கும் மட்டுமில்லே, வயிற்றுக்கும் விருந்துதான்.  என்ன? பர்ஸுலே கொஞ்சம் கனம் வேணும்.. இரசனையும், நேரமும், பணமும், நல்ல ஆரோக்கியமும் இருந்துட்டா, இந்த மார்கழியை எல்லாருமே அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி அனுபவிக்கலாம்.

மார்கழின்னா, முக்கியமா கோலத்தைப் பத்தி சொல்லியே ஆகணும்.  எவ்வளவுதான் மாற்றங்கள் வந்தாலும், வாசலிலே விதம், விதமா கோலங்கள் போடறது இன்னும் மாறலே.  இடம் இல்லாதவங்க, கோயில் வாசலிலே போடுவாங்க, அங்கங்கே நடக்கற கோலப் போட்டிகளிலே கலந்துப்பாங்க.  கோலத்துக்கு நடுவிலே சாணமும், பறங்கிப்பூவும்தான் காணாமப் போயிடுச்சு, என்னோட நண்பர்கள் நிறைய பேர் காணாம போன மாதிரி...ஹூம்...'மார்கழிப் பூவே, மார்கழிப் பூவே...'ன்னு பாடி, திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்...

பூஜைன்னா நைவேத்தியம், அதாவது படையல்.  அதுக்கு விதம் விதமா எப்படி தின்பண்டங்கள் செய்யலாம்னு யோசிப்பாங்க.. அதுக்கும் போட்டிகள் நடக்கும், சமையல் போட்டி...ஒரே அமர்க்களம்தான் போங்க!

இந்த கோயிலிலே துளசி தீர்த்தம், அதான் தண்ணி கொடுப்பாங்க பாருங்க, எவ்வளவு ருசியா, மணமா இருக்கும் தெரியுமா?  மார்கழிப் பனியிலே, துளசி தொண்டைக்கு ரொம்ப இதமா இருக்கும்.  இருமல், ஜலதோஷம், ஆஸ்த்மா, அஜீரணம், தசை வலி, காய்ச்சல், ஞாபக மறதி, காச நோய், தொழு நோய் இப்படி எத்தனையோ நோய்களை குணமாக்கற மருத்துவ குணங்கள் துளசியிலே இருக்கு.  நம்ம வீட்டுலே இருக்கற இடத்துலே, ஒரு தொட்டியிலேயாவது துளசிச் செடி வைக்கணும். கொசு மட்டுமில்லே, பாம்பு கூட அதை அண்டாது.  சுற்றுப்புறக் காற்று மட்டுமில்லே, நம்ம மனசும் தூய்மையாகும்.

மார்கழிலே ஆரம்பிச்சு, துளசியிலே கொண்டு விட்டுட்டேன்.  துளசியோட பெருமைகளை சொல்லிட்டே இருக்கலாம்.  நிறைய பேருக்குத் தெரியும்; தெரியாதவங்களுக்காக அடுத்த முறை சொல்றேன்..இப்போதைக்கு நான் கிளம்பட்டுமா?  பசிக்குது...

No comments:

Post a Comment